இசையுடன் நான்.....

இசையுடன் நான்.....

Monday, April 23, 2012

இளையராஜா இசைமைத்த ஒரு படம்...!

இளையராஜா இசைமைத்த ஒரு படம். பாட்டுக்கு மெட்டுப் போட்டாயிற்று. சித்ராவிற்கும் பாடிக் காட்டியாயிற்று. வாத்தியக்காரர்களை ஒருங்கிணைத்து எப்படியான இசைக் கோர்வை பாட்டில் வரவேண்டும் என்று இளையராஜா எதிர்பார்த்ததையும் வாத்தியக்காரர்களுக்குச் சொல்லியாயிற்று. சரி, இனிப் பாடல் ஒலிப்பதிவுக்கு முன் ஒத்திகை ஆரம்பமாயிற்று.

குறித்த பாடலின் இடையில் வரும் ஆர்மோனிய வாத்திய வாசிப்பை ஆர்மோனியக்காரர் வாசிக்கின்றார். ஆன...ால் ராஜா மனதில் எதிர்பார்த்தது ஏனோ அதில் மிஸ்ஸிங். மீண்டும் மீண்டும் இளையராஜா, குறித்த வாத்தியக்காரரை அந்த இசையை வாசிக்கச் சொல்லிக் கேட்கின்றார். ம்ஹீம், ராஜா எதிர்பார்த்த அந்தச் சங்கதி வரவேயில்லை.
இளையராஜா ஆர்மோனியத்தை வாங்கிக் கொள்கின்றார். நேராக ஒலிப்பதிவு ஆரம்பம். சித்ரா பாடுகின்றார். மற்றைய வாத்தியங்கள் சங்கமிக்க, இளையராஜாவே நேரடியாக ஆர்மோனியத்தை வாசிக்க, அவர் எதிர்பார்த்த அந்தச் சங்கதியே ராஜாவின் வாசிப்பில் பாடலாக ஒலிப்பதிவு செய்யப்படுகின்றது. இந்தப் பாட்டினை அணு அணுவாக ரசிப்பவர்களுக்கு உண்மையில் ராஜா வேண்டிக் கேட்ட அந்த அற்புத ஆர்மோனிய வாசிப்பின் தாற்பர்யம் புரியும். வளைந்து நெளிந்து குழைந்து என்னமாய் பிரவாகிக்கின்றது இந்த இசை.

கீதாஞ்சலி என்று தெலுங்கிலும் இதயத்தைத் திருடாதே என்று தமிழிலும் வந்த படத்தில் "ஜல்லந்த" என்று தெலுங்கு பாடி தமிழில் "ஆத்தாடி அம்மாடி தேன்மொட்டு தான்" என்றும் வந்த பாட்டு.

இளையராஜா குறித்து சில தகவல் துளிகள்!







* இளையராஜாவின் பிறந்த நாளும், கலைஞர் பிறந்த நாளும் ஜூன் 3. இப்போது இசைக்கு வயது 67. வீட்டில்தான் அவரது பிறந்த நாளைக் கொண்டாடுவார்கள். அவருக்கோ, அன்றும் மற்றுமொரு நாளே!

* திருவண்ணாமலைக்கான பயணங்களின் ரச...ிகர்... வழியே வயலோரச் சிறுவர்களைப் படம் எடுப்பார். அவர்களின் முகவரி கேட்டு, அவர்களுக்கே படங்களை அனுப்பி ஆனந்த அதிர்ச்சியும் தருவார்!

* மூகாம்பிகை கோயிலுக்குப் போய் வந்த பிறகு, அசைவ உணவையும் ஆபரணங்கள் அணிவதையும் நிறுத்திவிட்டார். கழுத்தில் இரண்டு ருத்திராட்ச மாலைகள் உரிமையாகப் புரண்டுகிடக்கும்!

* ராஜாவின் எளிய உணவு காலையில் இரண்டு இட்லி, மாதுளம்பழம் ஜூஸ், மதியம் கொஞ்சம் சாதம், பழம். இரவு இரண்டு சப்பாத்தி. காரம், உப்பு கிடையவே கிடையாது. சைவ ராஜா!

* குளிர் உறையும் வெளிநாடுகளுக்குப் போனாலும் அதே தும்பைப்பூ வேட்டி, ஜிப்பாதான். துபாயின் பிரபல ஹோட்டலில் வேட்டி அணிந்து உள்ளே நுழையத் தடை இருந்தது. அந்தத் தடையைத் தகர்த்துத் தங்கிய ஒரே மனிதர் இவரே!

* நவராத்திரிகள்தான் ராஜா வீட்டு ஸ்பெஷல். மிகச் சிறந்த சங்கீத, இசைக் கலைஞர்களைத் தன் வீட்டுக்கு வரவழைத்து, கச்சேரிகள் நடத்தி ரசிப்பார். நவராத்திரியில் இளையராஜாவின் வீடு இசையால் நிரம்பி வழியும்!

Thursday, March 29, 2012






இளையராஜா!

கறுப்பு வெள்ளையுமான
கட்டைகளைத் தொட்டே –
இவனால்
... வர்ணங்களை
உண்டாக்க முடிகிறது!

எப்போதும் ஏராளமான
விசிறிகள் இருப்பதால்..
இவனுக்கு
வியர்ப்பதே இல்லை!

இவனது
வளர்ச்சியைப் பார்த்து
இமயம் வெட்கிக்கிறது!

நகையணியாத செவிகள்
நாட்டிலே உண்டு!
இவன்
இசையணியாத செவிகள்
எங்குமே இல்லை!

ஆறு வாரம் தாண்டாத
அநேகப் படங்கள்
நூறு வாரம் தாண்ட
இவன் இசைதான்
அஸ்திவாரம்!

வானொலி-
இவன் பெயரைத்தான்
மனப்பாடம்
செய்து வைத்திருக்கிறது!

ஒரு மந்திரிக்குள்ள
மரியாதை
இந்த ராஜாவிற்கு
இருக்கிறது!

இவனுக்கு
இசைபாடத் தெரியும்!
இன்னொருவரை
வசைபாடத் தெரியாது!

இவனது
கொலு மண்டபத்தில்
இரந்து நிற்கும் புலவர்களை
இறந்து போகாமல்
இவன் ரட்சிக்கிறான்.

இவன் ஓர் இசைத் தீ;
இந்தத் தீயை உண்டாக்கியது
“பஞ்சு”!

இவன்தான் நாட்டுப் பாடலை
நகரத்திற்கு அழைத்து வந்து..
கோடம்பாக்கத்தில்
குடி வைத்தான்!

வயலின் வாசிப்பவனுக்கு
வயலின் சங்கீதத்தை
இவன்தான்
கற்றுக் கொடுத்தான்;

இவனது சுரங்களை
இசைக்காவிட்டால்
வாத்தியங்களுக்குச்
சுரங்கள் வந்துவிடும்!

இவனது அகம்
தை.. தை.. என்று ஆடாததால்..
அகந்தை இவனுக்கில்லை!

- கவிஞர் வாலி

Wednesday, February 22, 2012

இளையராஜாவின் இசை அற்புதம்!!!!






இசையின் மகத்துவம் உலகம் அறிந்ததுதான். ஆனால் அந்த இசையைக் கையாளும் விதத்தில்தான் அற்புதங்கள் நிகழ்கின்றன. இசையை மிகச் சரியாகக் கையாள்வதில் ராஜாவுக்கு நிகர் ராஜாதான்.

சமீபத்தில் ராஜாவின் இசை ஒரு மிகப் பெரிய அற்புதத்தை நிகழ்த்தியிருக்கிறது.

ஜெர்மனியைச் சேரந்த தம்பதிகள் அவர்கள். நிறைமாதத்தை எட்டும் தருவாயில் மனைவி. ஆனால் வயிற்றில் சிசுவின் அசைவையே உணர முடியவில்லை. பெர்லின் மருத்துவமனையில் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவரிடம் போய் செக்கப் செய்துள்ளனர். அவரும் பல சோதனைகள் மற்றும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துவிட்டு, குழந்தை அசைவின்றி இருப்பதற்கு என்ன காரணமென்று தெரியவில்லை. ஆனால் சிசுவுக்கு உயிர் இருக்கிறது என்று கூறி அனுப்பி வைத்துள்ளார்.

உயிர் இருந்தாலும் வயிற்றில் குழந்தை கை கால்களை அசைக்கும் போதுதானே ஒரு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் இருக்கும்...

என்ன செய்வதென்றே புரியாமல் தொடர்ந்து ஒவ்வொரு மருத்துவராகப் பார்த்து வந்திருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நம்பிக்கையிழந்து அமைதியாகிப் போனார்களாம். ஒருநாள் இளையராஜாவின் திருவாசகம் இசையை மன நிம்மதிக்காக ஓடவிட்டிருக்கிறார்கள்.

திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்ற சான்றோர் மொழி மெய்யாகிப் போனது.

என்ன ஆச்சர்யம்... சில நிமிடங்களில் வயிற்றில் ஒரு அசைவு தெரிந்துள்ளது. இசையை நிறுத்தியதும் அந்த அசைவும் நின்று விட்டது. தொடர்ந்து நான்குமுறை இப்படிப் போட்டுப் போட்டு நிறுத்தியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு முறை இசையைக் கேட்கும்போதும் குழந்தையின் அசைவு அதிகரித்துக் கொண்டே வந்திருக்கிறது. இசை நின்றதும் சில வினாடிகளில் அசைவும் நின்று போனதாம். அப்போதிலிருந்து தொடர்ந்து ராஜாவின் இசைதான் வீடு முழுவதும் ஒலித்துக் கொண்டே இருந்திருக்கிறது.

சரியாகப் பத்தாவது மாதம், குழந்தை ஆரோக்கியமாக, அதுவும் அறுவைக்கு அவசியமின்றி சாதாரணமாகவே பிறந்து, மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

படிக்க கதை போலத் தோன்றினாலும், இச்சம்பவம் நிஜம்தான் என்பதை மெய்ப்பிக்க அந்த ஜெர்மன் தம்பதிகளே சென்னைக்கு வந்திருந்தனர் சில தினங்களுக்கு முன்பு. அவர்கள் முன்பின் இளையராஜாவைப் பார்த்ததும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் அவரது இசை மட்டும்தான்.

ராஜாவின் உதவியாளரிடம் விஷயத்தைச் சொன்னதும் அவர் உடனே ராஜாவிடம் விஷயத்தைக் கூற அந்தத் தம்பதிகளை நேரில் சந்தித்து குழந்தைக்கும் ஆசி வழங்கியிருக்கிறார் ராஜா.

ஜெர்மனியின் மருத்துவர்கள் பலரும் இந்த இசை அற்புதத்தை ஒப்புக் கொண்டதோடு, ராஜாவின் திருவாசம் சிடியை வாங்கிக் கேட்டு, மொழி புரியாவிட்டாலும் அந்த இசைக் கட்டுமானத்தில் வியந்து போயிருக்கிறார்கள்.

அதோடு மருத்துவத்துறையில் இந்திய இசையால் என்னென்ன அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்ற ஆராய்ச்சியிலும் ஜெர்மன் டாக்டர்களை இறங்க வைத்திருக்கிறது இந்த சம்பவம்.

உண்மையில் இந்த அதிசயத்தையெல்லாம் விஞ்ஞானத்தின் துணையின்றி பல ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்தவர்கள் இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள். ஆனால் பாரம்பரியத்தை மறந்து போனதால் நமக்கு நம் பொக்கிஷங்களின் மதிப்பே தெரியாமல் போய்விட்டது.

போகர் மருத்துவத்தை நம்மவர்கள் ஓரங்கட்ட, அதை இன்னும் வெற்றிகரமாகக் கையாண்டு சாதனைகள் புரிகிறார்கள் ஜெர்மானியர்கள்.

இந்திய இசையை, இசைக் கலைஞர்களை பாதுகாக்க, கௌரவிக்க நாம் தவறிவிடக் கூடாது. இளையராஜா என்பவர் வெறும் திரை இசைக் கலைஞர் மட்டுமல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக உணர வைத்திருக்கும் சம்பவம் இது.

Monday, January 30, 2012

தென்றல் வந்து தீண்டும்போது" பாடல் பிறந்த கதை.... -

"தென்றல் வந்து தீண்டும்போது" பாடல் பிறந்த கதை.. !

'தோணி' திரைப்படத்தின் ஒலிப்பேழை வெளியீட்டு விழாவில் நடிகர் நாசர் உரையில் இருந்து...

”1994ல் நான் இசைஞானியிடம் சென்று..

‘சார்..! ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறேன்..!’

‘எதுக்குய்யா.. ?? பிஸியா நடிச்சிகிட்டு இருக்க..! எதுக்கு இப்போ Produce பண்ணிகிட்டு?

‘இல்ல சார்..! நான் டைரக்ட் பண்ணலாம்னு இருக்கேன்’

‘இப்போதான் பிஸியா இருக்கியே..! இப்போ எதுக்குய்யா?’

‘இல்ல சார்..! சில விஷயங்கள் தோணும்போது பண்ணனும்’..!

‘ஓ! தெளிவா பேசுறதா நெனப்போ ஒனக்கு? சரி என்ன படம்..?’

“சார்..! ஒரு சின்ன கிராமத்துக்கதை.. தெருக்கூத்தை வைத்து… …”

“தெருக்கூத்தா..? என்னய்யா? நான் வேற Journey-ல இருக்கேன்..! ம்ம்ம்..?? சரி..! பார்க்கலாம்’ என்றார். நான் ஏமாற்றம் அடையவில்லை. படப்பிடிப்பிற்குச் சென்றேன். படம் எடுத்தேன். தொகுத்தேன். பின்னணிக்குரல் சேர்த்தேன். பின்னணி ஒலிகள் சேர்த்தேன். ஒரு நாள்..

“சார் நான் படத்தை முடிச்சுட்டேன்..”

“என்ன அதுக்குள்ளேயா?”

‘ஆமா சார்..! நீங்க படம் பார்க்கணும்”

“சரி” என்றவர் படம் பார்த்தார். அந்தப் படம் ‘அவதாரம்’..! படம் முடித்துக் காரில் ஏறி, ‘வீட்டுக்கு வா’ என்றார். எனக்கு ஒரே பயம். பல நூறு படங்களைக் கண்ட ஒரு மாபெரும் கலைஞன் என் படத்தைப் பார்க்கிறான். ஒரு விமர்சனம், ஒரு பாராட்டுதல் இல்லாமல் ‘வீட்டுக்கு வா’ என்றால் என்ன அர்த்தம்? ஒரு வேளைத் திட்டப் போகிறாரோ? என்று பயந்துகொண்டே சென்றேன். அவருடைய வீடு சாத்வீகமாக, ஒரு கோயில் போல இருந்தது.

‘எப்படிய்யா இப்படி ஒரு படம் பண்ணியிருக்க..? நல்லாயிருக்கே..! சரி நாளைக்கு ரெக்கார்டிங் வச்சுக்கலாம்’

‘சார்…! நாளைக்கு…. … வச்சா … … .. ப்ரொடியூசர் ஊரில் இல்ல சார்..’

‘ப்ரொடியூசர் எதுக்குய்யா? டைரக்டர் நீ இருக்க..! மியூசிக் டைரக்டர் நான் இருக்கேன்..! வா.. பாத்துக்கலாம்..!’

‘சார்..! அதில்ல சார்..!’

‘புரியுதுய்யா..! போய்யா அதெல்லாம் ஒண்ணும் வேணாம்..! ப்ரொடியூசர் எங்க இருக்காரு?’

‘சார்… வந்து... அமெரிக்காவில்’

‘சரி..! வரட்டும் ..! அப்பறம் பாத்துக்கலாம்..! ரெக்கார்டிங் நாளைக்கு…”

உங்கள் எல்லோருக்கும் தெரியும். சினிமாவில் அட்வான்ஸ் என்ற ஒன்று இல்லாமல் ஒரு காரியமும் நடக்காது. பலவிதமான Excitement-க்கு நடுவே இதனால் எனக்குத் தலைகால் புரியவில்லை. அடுத்த நாள் ஆறு மணிக்கு வரச்சொன்னார். பதைபதைப்புடன் போனேன்.

வெள்ளை வெளேர் என்ற ஒரு அறை. கருப்பு வெள்ளையில் ரமண மகரிஷியின் ஒரு புகைப்படம். அதனருகில் அம்மா என்கிற ஒரு ஆத்மாவின் புகைப்படம். அதே கருப்பு வெள்ளை 3D Animation போல அருகில் இளையராஜா, அவர் பக்கத்தில் ஒரு கோப்பையில் இறக்குமதி செய்யப்பட்ட சாக்லேட்டுகள்..! இவைகளைத் தவிர அந்த அறையில் இருந்த மற்றொரு முக்கியமான விஷயம் ”அமைதி”. நான் சென்றபோது ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். நான் உட்காரவா வேண்டாமா என்று தயங்கி நின்றுகொண்டிருந்தேன். உட்காரச் சொன்னார். உட்கார்ந்தேன். ஒரு சாக்லேட்டை எடுத்து என்னிடம் போட்டார். நான் அதைப் பிடித்தேன். அந்த சாக்லேட் பேப்பரின் ஒலிதான் அந்த அறையில் நான் நுழைந்து ஐந்து நிமிடங்களில் நான் கேட்ட முதல் ஒலி. ”இதைப்பிரித்தால் சாக்லேட் பேப்பரின் ஒலி இவரை Disturb செய்துவிடுமே..? இதைப் பிரிக்கலாமா வேண்டாமா? சாப்பிடுவதா இல்லையா?” என்று எனக்கு யோசனை.

அவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். எழுதிக்கொண்டே இருக்கிறார். வேகமாக எழுதுகிறார். கோபத்துடன் எழுதுகிறாரா, பாசத்துடன் எழுதுகிறாரா, யாருக்கு எழுதுகிறார், என்ன எழுதுகிறார், எதுவும் தெரியவில்லை. நான் உட்கார்ந்துகொண்டே இருக்கிறேன். மெதுவாக எனக்குக் கோபம் வரத்துவங்குகிறது. ”என்ன இது? நான் ஒரு டைரக்டர்..! என்னை வரச்சொல்லிவிட்டு இவர் எழுதிக்கொண்டிருக்கிறார்..! அவர் சொந்த விஷயத்தை எழுதுவதற்கு என்னை எதற்கு வரச்சொன்னார்? ஒரு பத்து நிமிடங்கள் கழித்து வரச்சொல்லியிருக்கலாமே?”

பக்கம் பக்கமாக வேகமாக எழுதியவர், நிமிர்ந்து ‘புரு...’ என்றார். அவர் கூறியது ஒரு நான்கு அடி தள்ளி அமர்ந்திருந்த என் வரைக்கும்தான் கேட்டிருக்கும். ஆனால் வெளியில் இருந்து ‘புரு’ என்கிற ஆறடி உயர ‘புருஷோத்தமன்’ வந்தார். அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு Intimate communication..! Sheets எல்லாம் அவரிடம் கொடுத்துவிடுகிறார். ‘இதை Distribute பண்ணிடு’ என்கிறார்.

”சரி..! அவர் வேலை முடிந்தது..! இனி நம் வேலைக்கு வருவார்” என்று நினைத்தேன்.

‘என்ன சார்..?”

‘அது போய்டுச்சுய்யா’

'சார்.. ..'

‘அதுதான்.. அந்த first பாட்டு..! போய்டுச்சுய்யா..’

‘சார் .. எந்த Scene?’

‘யோவ்..! அதான் உன் படம் சொல்லிடுச்சேய்யா..! எந்தெந்தப் பாட்டு எங்கெங்க வரணும்னு’

‘அப்டியா சார்?’

‘ரொம்ப நல்லா வந்திருக்குதுய்யா.. கேளு..’ என்றவர், பாடத் துவங்குகிறார்.. ‘தன்னனன தான தான தான நான நா…. (தென்றல் வந்து தீண்டும்போது)’. அவர் போட்டிருந்த டியூன் எனக்குப் பிடிக்கவில்லை.

‘என்னய்யா? என்னய்யா யோசிக்கிற? கேளு..!’ என்றவர் மறுபடி ‘தன்னனன’ பாடத் துவங்கினார்.

அப்போதான் தெரிகிறது. நான் எவ்வளவு பெரிய ஞானசூன்யம் என்பது. ’நல்லாயிருக்குது என்று சொன்னால் எது நல்லாயிருக்குது என்று கேட்பார். நல்லாயில்லை என்று சொன்னால் என்னய்யா நல்லாயில்ல என்பாரே’ என்ற யோசனையுடன்..

‘இல்ல சார்..! இதற்கு முன்னால் வரும் பாடலில் காட்சிகள் கொஞ்சம் வேகம் குறைந்ததாக இருக்கும். இது கொஞ்சம் வேகமான பாட்டா இருந்தா நல்லா இருக்கும்.’

‘அதுதான்யா இது..! நல்லா வரும்யா..!’

’சார்..! கொஞ்சம் Tempo-வாவது ஏத்த முடியுமா?’

............ என் மேல் உள்ள அன்பா அல்லது ரீரெக்கார்டிங்கின்போது என்னுடைய நடிப்பைப் பார்த்துவிட்டு என் மேல் ஏற்பட்ட நல்ல ஒரு உணர்வா எதுவென்று தெரியவில்லை. வேறு எந்த மியூசிக் டைரக்டரிடம் நான் இதைச் சொல்லியிருந்தாலும் என்னை அடித்து ‘போடா வெளியே’ என்று துரத்தியிருப்பார்கள். ஒரு ஞானியிடம் சென்று ஒரு ஞானசூன்யம் சொல்கிறது ‘கொஞ்சம் Tempo ஏத்துங்க’..!

அவர் சிரித்தார். எனக்கு வேலை இருக்கிறதா என்று கேட்டு பின்னர் நாலு மணிக்கு வரச்சொன்னார்.

நான் சென்றவுடன் என்னுடைய Assistant Directors எல்லாம் டியூன் எப்படி இருந்தது என்று கேட்டார்கள். 'ஏதோ இருந்தது' என்று சொன்னேன். அதற்கு அவர்கள் ‘அவர் அப்படித்தான் சார் போடுவார். நாமதான் சார் நாலஞ்சு டியூன் போடச் சொல்லிக் கேட்டு வாங்கணும்’ என்றார்கள். நான் அதற்கு, ‘விடுங்கய்யா.. நாலு மணிக்கு வரச்சொல்லியிருக்கிறார். நான் Tempoவை கூட்டச்சொல்லியிருக்கிறேன்” என்றேன்.

நாலு மணிக்குச் சென்றேன். ரெக்கார்டிங் ஸ்டுடியோ ஒரு கல்யாண மண்டபம் போன்று இருந்தது. பலவிதமான வாத்தியக்கருவிகளின் பலவிதமான சப்தங்கள்..! பரவாயில்லை. நம் பாட்டுக்கு இவ்வளவு பேர் வேலை செய்கிறார்கள் என்று ஒரு சந்தோஷம். சரியாய் நாலரை மணிக்கு சொல்கிறார்…

’…புரு….!’ (இம்முறை கொஞ்சம் சத்தமாக). சரி ஒரு மானிட்டர் பார்க்கலாம்’

எங்கும் அமைதி…!

1…..! 1..2..3..4..

‘தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தம்தம் தானத் தன்னானா..’ பாடலின் கோரஸ் துவங்குகிறது.

'....... ...... ....'

'....... ...... ....'

I cried..... நான் அழுதேன். பக்கத்தில் அவர் முழங்கால்கள் இருந்தன. அவற்றைப் பற்றிக்கொண்டு.. ‘சார்..! தயவுசெய்து என்னை மன்னிச்சுடுங்க சார். நான் தெரியாம எதோ சொல்லிட்டேன்’ என்றேன்.

‘இருய்யா..! முழுசாக் கேளுய்யா’ என்றார்.

அப்படி உருவானதுதான் ‘தென்றல் வந்து தீண்டும்போது’ பாடல். எனக்கு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் எப்படி ஒரு மனிதன் சரளமாக, ஒரு கவிஞன் கோபத்தில், காதலில் அல்லது வீரத்தில் எழுதுவது போல இவ்வளவு வேகத்தில் இசையை எழுதமுடியும் என்பதுதான் (கைகளால் காற்றில் வேகவேகமாக எழுதிக்காட்டுகிறார்).

இளையராஜாவின் வெற்றிக்கு மற்றொரு காரணம் ‘கற்றல்’. எப்போதும் கற்றுக்கொண்டே இருக்கிறார். அவதாரம் திரைப்படத்தின் ஒரு மூன்று காட்சிகளை..

‘யோவ்..! இந்த மூணு சீன் ரொம்ப திராபையா இருக்கேய்யா’ என்றார்.

‘இல்ல சார்..! அவன் திரும்பத் திரும்ப எப்படியாவது என்னைக் கூத்துக்குழுவில் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கெஞ்சுகின்றான். அதை விளக்குவதற்காகத்தான் அந்த மூணு சீனையும் வைத்திருக்கிறேன். அது எனக்கு ரொம்ப தேவை சார்’ என்றேன்.

‘உனக்குத் தேவைய்யா..! ஆனால் பார்க்கிறவனுக்கு Interesting-ஆக இருக்கணும் இல்லையா?’ நீ அரை நாளில் ஷூட் பண்ணுவது போல இந்த இடத்தில் ஒரு பாட்டு போட்டுக்கொடுத்துவிடுகிறேன்’ என்றார். அந்தப் பாடல்தான் ‘அரிதாரத்தப் பூசிக்கொள்ள ஆசை’. அதாவது ஒரு ஏழரை நிமிஷத்து வறட்சியான மூன்று காட்சிகளை மிக அழகாகக் கொண்டுவந்து விட்டார். அவதாரம் படத்தின் ஒவ்வொரு பாட்டும் முத்தான பாடல்கள். அந்த ஐந்து பாடல்களும் இரண்டரை நாட்களில் பதிவு செய்யப்பட்டவை. இன்றைக்கு மாதங்கள் ஆகின்றன. சிலருக்கு வருடங்கள் ஆகின்றன.

போன வருடம் ஒரு படப்பிடிப்பிற்காக சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு ரோடு வழியாகச் செல்லவேண்டியிருந்தது. அது ஒரு விழாக்காலம் என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும் டீ கடைகளிலும், கோவில் விழாக்களிலும் பாடல்கள் ஒலித்துக்கொண்டு இருந்தன. சரி.. மக்கள் யாருடைய பாடல்களை கேட்கிறார்கள் என்று ஒரு கணக்கெடுக்கலாம் என்று நினைத்தேன். மேடைக்காக மிகைப்படுத்திச் சொல்லவில்லை. நான் கேட்டதில் ஏழு எம்.எஸ்.வி. பாடல்கள், மூன்று ஏ. ஆர். ரகுமான் பாடல்கள், இருபத்தெட்டு இளையராஜா பாடல்கள். தமிழ் சமூகம் இளையராஜாவின் பாடல்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது."

இசை என்பது வியாபாரம் மட்டுமே அல்ல. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்திஜி கூறினார். கிராமங்களில் வாழும் மனிதர்களின் மனதில் இன்னும் இளையராஜா பாடல்கள்தான் கேட்டுக்கொண்டிருக்கின்றன. இப்படி ஒரு விழா இளையராஜாவுக்கு மிகச் சிறியது. ஆனால் எங்கள் மனது பெரியது” என்றார்.