இசையுடன் நான்.....

இசையுடன் நான்.....

Tuesday, February 2, 2010

ரஹ்மானை பாராட்டிய இளையராஜா...




மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடுதான் அந்த நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா இடையே ரஹ்மான். புராணப்படங்களில் வருவது போல் முப்பெரும் கடவுள்களை ஒரே மேடையில் பார்த்தது போலிருந்தது. சற்று அதீதமாக இருந்தாலும் நான் அப்போது உணர்ந்ததை அதைத்தான். வர்ஜா வர்ஜயமில்லாமல் எல்லாவகை இசையையும் கேட்கிறவன்தான் என்றாலும் மனதிற்கு நெருக்கமாக இருப்பது இந்த மூன்று பேரும்தான். தமிழ்த் திரையிசைக் கலைஞர்களின் சங்கத்தின் சார்பில் ஆஸ்கர் விருது பெற்ற ரஹ்மானுக்கு பாராட்டுவிழா நடைபெற்ற நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட நிகழச்சியது.


என்னுடைய பதின்ம வயதுகள் இளையராஜாவோடு மாத்திரமே கழிந்தது. இப்போது மாதிரி அல்லாமல் எம்.எஸ்.வி.யை கேட்க அப்போது சற்று சலிப்பாக இருக்கும். அதற்குப் பின் ரஹ்மான் புயலாக உள்ளே நுழைந்தவுடன் ராஜாவை சற்று நகர்த்தி வைத்து விட்டு அவரின் ரசிகராக மாறிப் போனேன். ஆனாலும் கேட்கிற போது உள்ளே மிக ஆழமாக இறங்கி அதிகம் சலனப்படுத்துவது யார் என்றால் அது ராஜாதான். இந்த மாதிரியான ஒப்பீடு அவசியமில்லாதது என்றாலும் கூட எப்படியோ இது நிகழ்ந்து விடுகிறது. (ரஹ்மான் கூட இதைப்பற்றி தன் உரையில் சொன்னார்). நண்பர்களுடனான அரட்டையின் போது இந்த தலைப்பு வரும் போது என்னுடைய கொச்சையான ஒப்பீடு இப்படியாக இருக்கும்.

'ராஜாவின் இசை தாயின் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் உணர்வை தருவது; ரஹ்மானின் இசை, மனைவியின் மடியில்'. அப்படியானால் தேவா? என்றான் ஒருவன். அதை பொதுவில் சொல்லவியலாது.

இசை பற்றிய அடிப்படை அறிவோ அதன் நுணுக்கங்களோ அறியேன் என்றாலும் என்னுடைய கேட்பனுபவத்தில் 'ராஜாவின் இசைக்கோர்வை மிலிட்டரி அணுவகுப்பு போல ஒரு தீர்மானமான கண்டிப்புடன் இருப்பதை கவனித்திருக்கிறேன். ஆனால் ரஹ்மானின் இசை அப்படியல்ல. திடீரென்று பல எதிர்பாராத ஆச்சரியங்களைக் தரக்கூடியது. (மணிரத்னத்தின் 'உயிரே' திரைப்படத்தின் ஸ்ரீனிவாசின் குரலில் 'என்னுயிரே' பாடலைக் கேட்டுப் பாருங்கள்). ரஹ்மான் தன்னுடைய பாடல்களில் தாளத்தை (rhythm) மிக வசீகரமாக அமைப்பதில் கவனமாக இருக்கிறார்.

இருவரும் பாடகர்கள் மற்றும் வாத்திய இசைக் கலைஞர்களிடம் வேலை வாங்குவதும் இதை எதிரொலிப்பதாகத்தான் இருக்கிறது என்பதை பலரின் நேர்காணல்களிலிருந்து உணர்ந்திருக்கிறேன். ராஜாவின் ஒலிப்பதிவில் அவர் என்ன நினைக்கிறாரோ, அல்லது இசைக்குறிப்புகள் எழுதியிருக்கிறாரோ, அவை அச்சுப் பிசகாமல் வர வேண்டும் என்பதில் கண்டிப்பாக இருக்கிறார். ஆனால் ரஹ்மான் பாடகர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கிறார். அவர்களை வழக்கமான முறை தவிர அவர்களின் பிரத்யேக திறமையைப் பொறுத்து பல்வேறு வகையாக பாடச் சொல்லி பின்னர் அவற்றிலிருந்து பொருத்தமான சிறந்தவற்றை எடுத்து தன்னுடைய படைப்பை உருவாக்குகிறார். குறிப்பிட்ட பாடலின் இறுதி வடிவம் எப்படியிருக்குமென்று ரஹ்மானைத் தவிர யாருக்கும் தெரிவதில்லை.

அதிகப் பிரசங்கித்தனத்தை இங்கேயே நிறுத்தி விட்டு மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் என்னைக் கவர்ந்தவற்றை சொல்கிறேன்.

டி.எம்.எஸ்., P.B.ஸ்ரீனிவாஸ், சித்ரா, எஸ்.ஜானகி, கங்கை அமரன், வித்யாசாகர், பரத்வாஜ் உட்பட பில பிரபலங்களை சபையில் காண முடிந்தது.

* ஏவிஎம் சரவணன் கையைக் கட்டாமல் பேசிய போது "எம்.எஸ்.வி, வாலி போன்ற பல வருடங்களாக பணியாற்றும் திறமைசாலிகளை அரசு கவுரவிக்காதது வருத்தமாக இருக்கிறது" என்றார்.

* தனக்கு அளிக்கப்பட்ட பொன்னாடையை தமாஷாக வேட்டி போல கட்டிக் கொண்டு பேசிய எம்.எஸ்.வி. "நான் விருது பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. அதனால் அது குறித்து யாரும் வருத்தப்பட வேண்டியதில்லை. என்னுடைய பிள்ளைகள் விருது வாங்குவதைக் காண சந்தோஷமாக இருக்கிறது." (பின்பு உடல்நிலை சரியில்லாததாலோ என்னவோ நிகழ்ச்சியின் இடையிலேயே அப்போது பேசிக் கொண்டிருந்த ரஹ்மான் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு சென்றார்).

* வழக்கமாக அளந்து பேசும் இளையராஜா அன்று மிக உற்சாகமாக பேசியதைக் காண ஆச்சரியமாக இருந்தது.

" ஜான் வில்லியம்ஸ் என்கிற மேற்கத்திய இசைக் கலைஞர் நான்கு ஆஸ்கர் வாங்கியிருக்கிறார். ஆனால் அவர் அதை சில வருட இடைவேளைகளில்தான் சாதிக்க முடிந்தது. ஆனால் நம்ம ஆள் போனார்... (சற்று இடைவெளி விட்டதில் சபை ஆர்ப்பரிக்கிறது). ரெண்டு விருதை தட்டிட்டு வந்துட்டார்."

"ரஹ்மானுக்கு எத்தனையோ பிரம்மாண்ட பாராட்டு விழா நடக்கலாம். ஆனா இந்த மாதிரி ஒரு மேடை எங்கேயும் கிடைக்காது."

"நம்ம கிட்ட எத்தனையோ இசை மேதைகள் இருந்திருக்காங்க. நெளஷத் அலி, மதன் மோகன், ரோஷன், எப்பேர்ப்பட்ட இசையமைப்பாளர்கள். நம்ம எம்.எஸ்.வி அண்ணா எத்தன படங்களுக்கு இசையமைச்சிருக்காரு. ஒருவேளை இந்த கம்போசர்ல்லாம் இல்லைன்னா.. இந்த விருதையெல்லாம் யாருக்கு கொடுப்பாங்க? கம்போசர்தான் முக்கியம். எல்லோரும் 12 Notes இருக்கும்பாங்க. நம்ம பாலமுரளி அண்ணா 27 சுருதியும் பாடிக் காட்டுவார். எனக்கு எப்ப இசையில் சந்தேகம் வந்தாலும் அவர்கிட்டதான் கேட்பேன். எந்த மேடையிலும் ஏறக்கூடிய தகுதி அவருக்கு இருக்கு."

"சம காலத்துல இசையமைச்சிக்கிட்டு இருந்த மதன் மோகனும் ரோஷனும் ஒருத்தரையொருத்தர் சந்திச்சிக்கிட்டதே இல்ல. தீடீர்னு ரோஷன் செத்துப் போயிடறாரு. சின்ன வயசுதான். 32. அவர் வீட்டுக்குப் போன மதன் மோகன் ரோஷனோட உடலைப் பாத்து சொல்றாரு.. You fool! To whom i will answer hereafter?". அதாவது அவங்க சந்திக்கவே இல்லைன்னாலும் தங்களின் பாடல்களின் மூலமா உரையாடிக்கிட்டு இருந்திருக்காங்க. அவங்க சந்திக்கத்தான் வேண்டுமா, என்ன?"

"எம்.எஸ்.வி அண்ணாதான் இங்க ஆதார ஸ்ருதி. அதற்கு மேல நான் பஞ்சமம். ரஹ்மான் அதற்கு மேல சட்ஜமம்"

* பாடகி எஸ்.ஜானகி பேசும் போது ரஹ்மானின் தந்தையும் மலையாளத் திரைப்படங்களில் இசையமைப்பாளராக இருந்த சேகரை நினைவு கூர்ந்தார். "அவர் இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பாரு".

வழக்கமாக பொதுவில் தன்னுடைய உணர்ச்சியை சற்றும் வெளிப்படுத்தாத ரஹ்மான் அப்போது உணர்ச்சிப் பெருக்கில் வழிந்த கண்ணீரை இயல்பாக துடைத்துக் கொண்டதை காண ஆச்சரியமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. அதிலிருந்து உடனே சற்று தன்னை மீட்டுக் கொள்ள அவர் வெளிப்படுத்திய உடல்மொழி பார்க்க அழகாக இருந்தது. மற்றவர்களின் அனுதாபங்களை ரஹ்மான் விரும்புவதில்லை. சில வருடங்களுக்கு முன் அவரின் தொலைக்காட்சி நேர்காணலில் அவருடைய இளமைப்பருவ வறுமையைப் பற்றிய கேள்விக்கு "ரொம்பக் கஷ்டப்பட்டோம்" என்று கூறியவர் உடனே சுதாரித்துக் கொண்டு "ரொம்ப டிராமாட்டிக்கா சொல்ல வேணாம்னு பாக்கறேன்" என்று அடுத்த கேள்விக்கு தாவி விட்டார்.

கே.பாலச்சந்தர், பாடகர் மனோ, பரத்வாஜ், வித்யாசாகர், தேவிஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட பலர் ரஹ்மானை வாழ்த்திப் பேசினர். ஹாரிஸ் ஜெயராஜ் பேசும் போது ரஹ்மானைப் பார்த்துதான் கீபோர்டை எடுத்ததாகவும் எப்போதும் அவர்தான் தன்னுடைய இன்ஸ்பிரேஷனாக இருப்பதைக் குறிப்பிட்டார். சங்கர்(கணேஷ்) நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசியது அதீதமாக இருந்தது.

எல்லாப் பாராட்டையும் புன்னகையால் மட்டுமே ஏற்றுக் கொண்ட ரஹ்மான் ஆஸ்கர் விருது பெறுவதற்கான முயற்சியின் நடைமுறைகளை சுருக்கமாக சொன்னார். "வெளிநாட்டுப் படங்களுக்கு ஆஸ்கர் கிடைக்கும் போது ஏன் நம்ம நெளஷத், இளையராஜா போன்றவங்களுக்கு கெடைக்கலைன்னு முன்ன நினைப்பேன். ஆனா அகாதமி உறுப்பினர்களுக்கு நம்ம அறிமுகம் தேவையாயிருக்கு. யாருன்னு தெரியாம ஒட்டுப் போட மாட்டாங்க. என்னோட ஏஜெண்ட் மூலமா இதைச் செஞ்சேன். ஆனால் ஸ்லம்டாக் மில்லியனருக்கு ஆஸ்கர் கிடைக்கும்னு யோசிச்சு இசையமைக்கலை. கிடைச்ச நேரத்துல வழக்கமாகத் தான் செஞ்சேன். இளையராஜா, எம்.எஸ்.வி பேசும் போதெல்லாம் உங்க பலத்த கைத்தட்டல பார்த்தேன். இதுதான் உண்மையான ஆஸ்கர்விருது. தயவுசெஞ்சு ஒருத்தர பாராட்டறதா நெனச்சிக்கிட்டு இன்னொருத்தர திட்டாதீங்க".


கலைஞர்கள் தங்களின் மனமாச்சரியங்களை களைந்து வைத்து விட்டு இப்படியாக தங்களின் சமகால கலைஞர்களை வெளிப்படையாக பாராட்ட முன்வருவது பாராட்டத்தக்கதாக இருக்கிறது.